புத்தகக்காட்சியும் க.சீ.சிவக்குமாரும்
சென்ற சனி(!)யன்று புத்தகக்காட்சிக்கு வருகை புரிந்தேன்! (சரி!சரி!)
குமுதமும் ‘புதியதலைமுறை’யும் பளிச்!
வாங்கிய புத்தகங்கள்:
எழில்வரதனின் கருங்கல்கோட்டை சிங்க பைரவன் கதை:
இதை வெகு நாட்களாக வாங்க நினைத்துக்கொண்டிருந்தேன்! காகிதப்பூ (‘மல்லிகை மகள்’ பத்திரிகைக்காரர்கள்) பதிப்பகம் கோடம்பாக்கத்தில் இருந்ததால் நேரில் செல்லவில்லை!
மல்லிகைமகள் ஸ்டாலில் இதைப் பார்த்தவுடன் தூக்கிவிட்டேன்!
மற்றுமொரு காரணம்: எனது (புத்தக) பையை கிழக்கில் அடைகாக்க மாட்டேனென்று பில்போடுபவர் நிர்தாட்சண்யமாய் மறுத்துவிட்டார் (அவ்வளவு கூட்டத்தில் நான் அவரிடம் கேட்டதே தவறு!). எனவே சுமைதாங்கியாய் ஒரு காப்பிடம் தேவைப்பட்டது! (‘மல்லிகை மகள்’காரர்கள் இதைப் படிக்காமலிருக்கவும் சொக்கன் இதைப்படித்தாலும் அவர்களிடம் சொல்லாமலிருக்கவும் வேண்டுகிறேன்
)
தினமணிடூன் -1: (மதியின் கேலிச்சித்திரங்கள் ஆரம்பத்தொகுப்பு)
கடந்த மூன்று வருடங்களாக இதைத் தேடிக்கொண்டிருக்கிறேன். பயனில்லை! இந்தமுறையும் கேட்டதற்கு முன்னடியில் இருந்தவர் ‘இல்லை’பாட்டுதான் பாடினார். தற்செய்லாக உள்ளே பார்த்தால் முன்னட்டை கிழிந்த ஒரு பிரதி! கேட்டால் கட் அன்டு ரைட்டாக ‘For Office Use only‘ என்ற பதில் வந்தது. நல்லவேளையாக மற்றொருவர் ‘இல்லங்க. ரொம்ப கிழிஞ்சுடுச்சுன்னுதான் வெச்சிருக்கோம்’.
நான் “பரவாயில்லை கொடுங்க’னு கொடாக்கண்டனாக வாங்கினேன்! பாவம் எனக்காக அட்டைப்பெட்டிகள் ஒட்டும் ‘டேப்’பைத் தேடியெடுத்து ஒட்டிக் கொடுத்தார்!
இங்கே வாங்கிய மற்ற புத்தகங்கள்:
தினமணி இசை மலர் – 2009 (ரூ.50/. வைத்தியநாதன் சீனியர்களின் ‘அனுதினக் கச்சேரி’ பற்றி வருந்தியிருந்தார்!)
தினமணி தீபாவளி மலர் -2009 (ரூ.20க்கு இந்த புத்தகம் நிச்சயம் ஒரு ஜாக்பாட் Collector’s special!)
கிழக்கில் இந்த முறை ராஜீவ்காந்தி புத்தகம் ஞாபகம் வைத்து வாங்கினேன். மெதுவாய் படிக்கலாம் என்று எடுத்து வைத்தேன்.
அசிரத்தையாய் நடுவில் இரண்டு அத்தியாயம் படிக்க, பரபரப்பில் உந்தப்பட்டு அடுத்த நாளே முடித்துவிட்டேன்.
No comments! நிச்சயம் வாங்கிப் படிக்கலாம்!
கிழக்கில் வாங்கிய மற்றொன்று – சுஜாதாவின் ‘ஆஸ்டின் இல்லம்‘ வாத்தியாரைப் பற்றி என்ன சொல்ல?!
இதில் வரும் அந்த நந்துவின் சில வசனங்கள் மற்றும் எண்ணங்களில் சுஜாதாவின் சில கவலைகள் subtleஆகத் தெரிவது பிரமையோ?!
குமுதத்தில் கிருஷ்ணா டாவின்சியின் ‘நான்காவது எஸ்டேட்‘ (65)- தெஹெல்கா.காம் பங்காரு லட்சுமணை சிக்கவைத்த ‘திரைமறை சாகசத்தை’ மையமாக வைத்து பின்னப்பட்ட த்ரில்லர்! விகடன் மொழியில் சொன்னால் – விறுவிறு பரபர மொறுமொறு!
தீம்தரிகிடவில் இந்த முறை ‘மா’ என்று ஒரு கட்டுரை தொகுப்பும்(15) ஞாநியின் பெரியார் நாடகமும் (20) வாங்கினேன்!
ஓ பக்கங்கள் இதுவரை வந்த அனைத்து கட்டுரைகளும் கிடைக்கின்றன (விகடனில் இரண்டு, குமுதத்தில் ஒன்று, கிழக்கில் ஒன்று)
‘அறிந்தும் அறியாமலும்’ ஞானபானு வெளியீடாகக் கிடைக்கின்றது.
ஞாநி தனது ஓ பக்கங்களில் (இரண்டு வாரங்களுக்கு முன்பு 31/12/2009 தேதியிட்ட குமுதத்தில்) அந்தக் கட்டுரையைக் கொண்டு செல்பவர்களுக்கு 30% தள்ளுபடி என அறிவித்திருந்தார்!
சற்று முன்னேற்பாடாக இல்லாததனால் சோதிக்க முடியவில்லை (30 ரூவாய்க்கு ரொம்பத் தேவை!)
‘சந்தியா’விலிருந்து கிட்டத்தட்ட வெளியேறிய போது கல்யாண்ஜியின் ‘நிலாப் பார்த்தல்‘ கண்ணில் பட்டது
ஏனோ பரிசல்காரனின் நினைவு வந்தது. மேலும் கல்யாண்ஜி கவிதைகள் மற்றும் விக்கிரமாதித்தனின் ‘தன்மை முன்னிலை படர்க்கை‘ (கட்டுரைத் தொகுதி) அனைத்தும் வாங்கிக்கொண்டேன்!
விகடனில் புத்தகப்பட்டியலைத் தவிர ஒன்றுமே வாங்கவில்லை!
இந்த முறை குறிப்பிட்டு சொல்லவேண்டியது க.சீ.சிவக்குமாரை மிக யதேச்சையாக சந்தித்தது, அப்புறம் நடந்த ஆச்சரியங்கள்! (தலைப்புக்கு வந்தாச்சு!)
கிழக்கிலிருந்து வெளியே வந்ததும் யாரோ ஒருவரின் மேல் நான் தடுமாற சட்டென்று சுதாரித்து மன்னிப்புக் கோரினேன்!
மனுசன் சிரித்து ‘பரவாயில்லீங்க! நீங்களாச்சும் சாரி சொன்னீங்க! ஒருத்தர் கண்டுக்காமலே (‘எருமைமாடு மேல் மழை பேஞ்சா’ மாதிரி என மனதில் சொல்லிக்கொண்டிருக்கக் கூடும்!) போயிட்டார்’ என்றார் பெருந்தன்மையுடன்.
அங்கிருந்து அகல எத்தனிக்கையில் சிவக்குமார் கண்ணில் பட்டார்!
“நீங்க சிவக்குமார்தானே?”
“ஆமா! நீங்க?”
“நான் வெங்கட்ரமணன்…” இதற்கப்புறம் அவர் என்னைப் பேசவே விடவில்லை
ஏதோ எனக்கென்றேக் காத்திருந்தவர் போல், “வாங்க அப்படியே போயிட்டு வரலாம்” என்று (கிட்டத்தட்ட) தள்ளிக்கொண்டு போனார்.
நடுவில் அருள் எழிலன், சுகிர்தராணி அனைவருக்கும் ஒரு “Hi, Bye” சொல்லிவிட்டு நாங்கள் (நானல்ல! அவர்தான்! நான் இவர்களை நேரில் இப்போதுதான் முதலில் பார்க்கிறேன்!) போய்ச்சேர்ந்த இடம்: கிழக்கின் விருட்சம் ஸ்டால்!
குணச்சித்தர்கள் வாங்கிக்கொண்டேன் (“இந்தாள் எழுதின ‘என்றும் நன்மைகள்’ எங்கேப்பா?” என கிழக்கிலிருந்தவரிடம் விசாரித்தார்! வழக்கம் போல அவருக்கு காமெடி புரியவில்லை!)
பிறகு வம்சி பதிப்பகம் (இதற்குள் கிட்டத்தட்ட எனது பட்ஜெட்டை நெருங்கி விட்டேன்!)
போனதும் அவரது “உப்புக் கடலைக் குடிக்கும் பூனை“யின் முன்னுரையைப் படிக்கச் சொன்னார்.
இந்த இடத்தில் ஒரு வார்த்தை:
பொதுவாகவே எனக்கு சிவக்குமாரின் எழுத்தை எந்தவொரு வடிவத்திலும் (விகடனில் வெளிவந்த கதைகள், ஆதிமங்கலம், கட்டுரைகள், எழில்வரதனின் புத்தகத்தின் முன்னுரை…) வாசிக்கப் பிடிக்கும்.
(சுஜாதாவின் ஸ்ரீரங்கம் போன்று இல்லாவிட்டாலும் எனக்கென்று நினைவிலிருக்கும் என்)கொங்கு மண்டலத்தை கண்முன் நிறுத்தும் எழுத்து என்பதால் க.சீ.யின் எழுத்து எனக்கு சற்றே அந்தரங்கமானது! எனவே மறுபேச்சு பேசாமல் படித்தேன்!
பார்த்தால் மனுசன் நான் தனது சிறுகதைகளைத் தொகுத்ததைக் குறிப்பிட்டிருந்தார்! ஆச்சரியம்!
அப்புறம் எப்படி இந்தப் புத்தகத்தை விடுவது? வாங்கிவிட்டேன்!
மற்றபடி ‘ஸ்பெக்ட்ரம் ஊழலை‘ப் பற்றிய ஒரு (ஒல்லி) 5ரூ. புத்தகம், தகவலறியும் உரிமைச்சட்டம் பற்றிய ஒரு சிறிய கையேடு (ரூ.30) என பொறுக்கி முடித்தேன்!
இல்லாததனால் வாங்காமல் விட்டது: கிழக்கில் ஜெயமோகனின் ‘பனிமனிதன்‘ மற்றும் கர்நாடக் சங்கீதம்: ஒரு எளிய அறிமுகம்!
விலை அதிகமென நினைத்து வாங்காமல் விட்டது: ஜெயமோகனின் இன்றைய காந்தி, தமிழினி வெளியீடு (ரூ.300)
ஆக ஒரு முறை போய் வந்தாயிற்று! முடிந்தால் அடுத்த சனி ஞாயிறில் அடுத்தமுறை!
நிச்சயம் போய் வாருங்கள்! குழந்தைகளை அழைத்துச்செலுங்கள் (உங்கள் அண்டைவீட்டுப் பெற்றோர் சுணங்கினால் நீங்கள் பொறுப்பேற்று அந்தப் பசங்களை கூட்டிப்போங்கள்!)
Read Full Post | Make a Comment ( None so far )



